ஈரோடு, மார்ச் 1: ஈரோடு மாவட்டத்தில் 1412 மையங்களில் 1.76 லட்சம் குழந்தைகளுக்கு வருகின்ற 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் மூலமாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், துணை சுகாதார மையங்கள், துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மொத்தம் 1412 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகின்ற 3ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் 5,391 பணியாளர்களை கொண்டு 61 அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என 1.76 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகின்றது. ஈரோடு மாவட்ட பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் வசிப்பிட பகுதிக்கு அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அணுகி போலியோ சொட்டு மருந்தை வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மாவட்டம் முழுவதும் 1412 மையங்களில் 1.76 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து முகாம் appeared first on Dinakaran.